நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய உயர்மட்ட குழுவினர் மாஞ்சோலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள் மாஞ்சோலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் தேயிலை உற்பத்தியில் மும்பையை சேர்ந்த பி.பி.டி.சி. நிறுவனம் ஈடுபட்டிருந்தது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்திருப்பதாலும், அது காப்புக்காடாக இருப்பதாலும், வரும் 2028-ம் ஆண்டுக்குள் உற்பத்தியை நிறுத்தவும், தொழிலாளர்களை வெளியேற்றவும், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தேயிலைத் தோட்ட நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.