சென்னை: “உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் மூலம் தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். முதல் நாளான இன்று 3 தொகுதி நிர்வாகிகள் கருத்துக்களை முதல்வரிடம் தெரிவித்தனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முன்கூட்டியே தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் அனைவரும் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். என் வாக்குச்சாவடியில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பேன்- என் தொகுதி – வெற்றித் தொகுதி என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். பாஜகவிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் கட்சி கட்டமைப்பும், கொள்கை பிடிப்பும், வலிமையான தலைமையும், நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கிறது.
ஆனால், தேர்தல் வெற்றிக்கு இதுமட்டும் போதாது! பூத் அளவில் வெற்றி பெறும் வாக்குகள்தான் தொகுதியில் வெற்றி பெற வைக்கும். தொகுதிகளை வென்றால்தான் ஆட்சி! அதனால், பூத் அளவிலான மைக்ரோ மேனேஜ்மெண்டும் மிக முக்கியம். தமிழ்நாடு முழுவதும் எத்தனை உட்கட்டமைப்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். அதெல்லாம் தொய்வில்லாமல் சொன்ன தேதியில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றால், மீண்டும் நம்முடைய ஆட்சிதான் வர வேண்டும் என்று புரிய வையுங்கள். ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொறுப்பை நான் வழங்கியிருக்கிறேன். அதை சிறப்பாக – எந்த விமர்சனமும் இல்லாமல், செய்து காட்டினால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக இன்று முதல் சந்திக்க தொடங்கியுள்ளார். “உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அதுவும் தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒன் டூ ஒன் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். இதனால், நிர்வாகிகள் மனம் விட்டு தங்கள் கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து வருகின்றனர். சந்திப்பின் போது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், வெற்றி வாய்ப்பு தொகுதிகளில் எவ்வாறு இருக்கிறது. மக்கள் திமுக ஆட்சியை பற்றி என்ன நினைக்கிறார்கள். திமுக அரசு செய்த மக்கள் நலன் திட்டங்கள் குறித்து மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்.
மக்கள் இன்னும் என்ன அரசிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறார்கள், தொகுதிகளில் எம்எல்ஏக்களின் செயல்பாடு எப்படி உள்ளது. தற்போதுள்ள எம்எல்ஏ பற்றி என்ன கூறுகிறார்கள் என்று கருத்துக்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒன் டூ ஒன் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருவதால் திமுகவினர் மகிழச்சியில் உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 234 தொகுதி நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார்.
The post ”உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி நிர்வாகிகளுடன் நேரடி சந்திப்பு: முதல் நாளில் 3 தொகுதி நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர் appeared first on Dinakaran.