ஊட்டி : ஊட்டி அருகே பைக்காராவில் தண்ணீர் இருப்பு குறைந்த நிலையிலும் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் நகரிலுள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா ஆகிய சுற்றுலா தலங்களை மட்டுமின்றி, நகருக்கு வெளியே உள்ள பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி, அப்பர்பவானி உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் காண ஆர்வம் காட்டுகின்றனர்.
அதன்படி, ஊட்டி – கூடலூர் சாலையில் 22 கி.மீ. தொலைவில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளன. அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பைக்காரா படகு இல்லத்தில் 30 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், எட்டு இருக்கை மோட்டார் படகுகள் 19, பத்து இருக்கை மோட்டார் படகு ஒன்று, 15 இருக்கை மோட்டார் படகு ஒன்று, மூன்று இருக்கை அதிவேக படகுகள் 7 என்ற எண்ணிக்கையில் உள்ளன.
இதுதவிர, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 5 இருக்கை கொண்ட ஓர் உல்லாச படகு, இரண்டு ‘வாட்டர் ஸ்கூட்டர்’ படகுகளும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பைக்காரா அணையானது படகு சவாரிக்கு முன்பாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் உற்பத்திக்காக பைக்காரா அணை கட்டப்பட்டது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த அணையில் இருந்து மின் உற்பத்திகாக தண்ணீர் திறந்து விடும்போது, வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடும். குறிப்பாக, பாறைகளின் நடுவே ஆற்றில் வெள்ளம் செல்லும் காட்சி, பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.
மின் உற்பத்தி மற்றும் கடநாடு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக நீர் எடுக்கப்படுவதால் தற்போதைய நிலவரப்படி, அணையின் முழு கொள்ளளவு 110 அடியில் தற்போது தண்ணர் இருப்பு சுமார் 60 அடி அளவிற்கு உள்ளது. இதனால் படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகள் பல படிக்கட்டுகள் கீழே இறங்கி சென்று படகு சவாரி செய்து வருகின்றனர்.
குறிப்பாக வார இறுதி நாட்களில் கூட்டம் காணப்படுகிறது. வரும் நாட்களில் வெயில் கொளுத்தும் என்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. படகு இல்ல ஊழியர்கள் கூறுகையில், பருவ மழை போதுமான அளவு பெய்து, அணை முழுமையாக நிரம்பியது.
இந்நிலையில், தற்போது மின் உற்பத்தி மற்றும் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தண்ணீர் எடுக்கப்படுவதால், அணையில் நீர் குறைந்துள்ளது. இருப்பினும், படகு சவாரி செய்வதில் சிக்கல் இல்லை. படகு இல்லத்தில் வழக்கம்போல் படகுகள் இயக்கப்படுகின்றன” என்றனர்.
The post ஊட்டி அருகே பைக்காரா அணையில் நீர் மட்டம் சரிந்தாலும் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் appeared first on Dinakaran.