சென்னை: தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகிய நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், மனுதாரர்கள் அனைவரும் 47 நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென்று வாதிட்டார். புகார்தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார்தாரரிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட பணம் இன்னும் ஒப்படடைக்கப்படவில்லை என கூறினார். இதனையடுத்து, நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, வழிப்பறி செய்யப்பட்ட பணத்தை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
The post ஊழியரிடம் ரூ.20 லட்சம் பறிப்பு வழக்கு; எஸ்ஐ உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.