நடிகை சோனா, ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானவர். அடுத்து, குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு என பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ள இவர், தனது வாழ்க்கை கதையை மையமாக வைத்து ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடராக இயக்கியுள்ளார். ஷார்ட் பிளிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இதில், முகேஷ் கன்னா, ஆஸ்தா அபே, இளவரசு, ஜீவா ரவி என பல நடித்துள்ளனர். இந்த வெப் தொடருக்கு எதிராக பலர் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகவும் பல அவமானங்களை சந்தித்ததாகவும் சோனா தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது சில இடங்களில் முடியாமல் கண்ணீர் விட்டார்.
அவர் கூறியதாவது: இந்த வெப் தொடர், 8 எபிசோடுகளை கொண்டது. ஒவ்வொன்றும் அரைமணி நேரம் இருக்கும். விரைவில் வெளியாக இருக்கிறது. 2010-ம் ஆண்டில் இருந்து 2015- வரை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இத்தொடரை உருவாக்கி இருக்கிறேன். அதற்குப் பிறகு இந்த தொடரின் சீசன் 2- வரும். ‘பயோபிக்’ என்று நான் ஆரம்பித்ததுமே எனக்கு எதிரிகள் முளைத்துவிட்டார்கள். ஒருவர் இரண்டு பேர் இல்லை. ஒரு கும்பலாக வந்துவிட்டார்கள். இந்த வெப்தொடரை எடுக்கவிடாமல் தடுத்தார்கள். சிலர் பணத்தை ஏமாற்றினார் கள். இத்தொடருக்கு எதிராக என்னைத் துரத்திக் கொண்டே இருந்தார்கள். தனி மனுஷியாக அந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு இத்தொடரை இயக்கி இருக்கிறேன். யாரையும் பழிவாங்குவதற்காக இந்த தொடரை இயக்கவில்லை. கவர்ச்சி நடிகை என்ற பெயரை மாற்றி இயக்குநர் சோனா என்ற பெயர் கிடைக்கும் என்றுதான் இத்தொடரை இயக்கி இருக்கிறேன். அடுத்தும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க அழைத்தார்கள். இனி அப்படி நடிக்க மாட்டேன். குணச்சித்திர பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். இவ்வாறு நடிகை சோனா கூறினார்.