கிராமத்தில் ஊர் தலைவரின் மகள் லீலா (ரூபா கொடுவையூர்). சிறுவயதிலிருந்தே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர், குடும்பம், சொந்த பந்தங்களின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார். ஒருநாள் இரவு லீலா தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது மரணத்துக்கு ஆஸ்துமாவே காரணம் என ஊர் மக்களும், குடும்பத்தினரும் நம்புகின்றனர். இன்னொரு பக்கம் லீலாவின் அண்ணன், அம்மன் நகையை அவசர தேவைக்கு எடுத்துவிட்டு அதை திரும்ப வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் லீலாவின் மரணத்துக்கு என்ன காரணம்? லீலாவின் வீட்டில் இருக்கும் மர்ம அறைக்கான பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ‘எமகாதகி’.
படத்தின் ட்ரெய்லர் திகில் படம் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினாலும் இப்படத்தை வெறுமனே ஒரு திகில் படம் என்று சொல்லிவிடமுடியாது. அமானுஷ்யத்தின் துணையுடன் பல ஆழமான விஷயங்களை நான் லீனியர் திரைக்கதை வழியே நேர்த்தியாக பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்.