ஏமாற்றுப் பேர்வழிகளிடம் முதியவர்கள் நகையையோ பணத்தையோ பறிகொடுப்பது தொடர்பான வழக்குகள் அதிகரித்துவருகின்றன. முதியவர்கள் பணத்துக்காகக் கொலை செய்யப்படும் அவலங்களும்கூட அரங்கேறுகின்றன. இந்நிலையில், அந்த வழக்குகளில் காவல் துறையால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிப்பதை உறுதிசெய்துள்ள சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது.
பெரும்பாலும் உடல்நலம் குன்றி, வெளியுலக நடப்புகள் குறித்த புரிதலில் பின்தங்கியுள்ள முதியவர்களை ஏமாற்றுவது சமூக விரோதிகளுக்கு எளிதாக இருக்கிறது. இவர்களை வீட்டிலோ, பொது இடங்களிலோ மிரட்டி அல்லது ஏமாற்றி உடைமைகளைப் பறிக்கும் குற்றங்கள் இந்திய அளவில் அதிகம் நிகழ்வதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கைகள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றன.