சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கொலை அம்பலமானதால் இளைஞர் ஒருவர் மாறி மாறி வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் பெரிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் விடுதியில் திருச்சி சேர்ந்த லோகாம்பிகை என்ற இளம்பெண் ஒருவர் அங்கு தங்கி வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண்ணை கடந்த 4 நாட்களாக காணவில்லை, அவரது செல்போன் அழைப்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து எங்கு சென்றார் என்பது குறித்து தகவல் தெரியாத நிலையில் விடுதி வார்டன் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பார்த்த போது பெண்ணின் செல்போன் அழைப்பிற்கு யாரெல்லாம் பேசினார்கள் என்ற பட்டியலை எடுத்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் எண் பதிவாகி இருந்தது. அந்த பெண்ணின் செல்போன் ஏற்காடு மலைப்பகுதியில் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் இளம்பெண்ணிடம் பேசிய வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக போலீசார் தெரிவித்தார்.
குறிப்பாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும். அதே போன்று உடலில் வெட் ஊசி செலுத்தி கொலை செய்ததாகவும், அதுமட்டுமில்லாமல் மலை பகுதிக்கு அழைத்து சென்று தள்ளி கொலை செய்ததாகவும் மாறி மாறி இளைஞர் வாக்குமூலம் அளித்தார். வாலிபர் இளம்பெண்ணை அழைத்து சென்று கொலை செய்ததாக கூறிய இடங்களுக்கு போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது சேலம் காவல் நிலையத்தில் இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறையினர் உதவியுடன் மலைப்பகுதிக்கு சென்று அப்பகுதியில் இருந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சம்பவம் சேலம் ஏற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம்: கொலை அம்பலமானதால் மாறி மாறி வாக்குமூலம் அளித்த இளைஞர் appeared first on Dinakaran.