சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பள்ளிக் கல்வித் துறைக்கு, சட்டபூர்வமாக வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழ்நாடு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் தாமேந்திர பிரதான் முறையான பதில் அளிக்காமல் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் இழிவுபடுத்தி தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். அவர் பல நேரங்களில் தமிழ் மக்களையும், தமிழ்நாட்டையும் சிறுமைப்படுத்தி வருகிறார். இந்தச் செயல் தொடருமானால் தமிழ்நாடு அமைதி கொள்ளாது என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். அமைச்சரின் ஆணவப் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இழிவு பேச்சுக்கு முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.