சென்னை: ஒன்றிய நிதிஅமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பீகார் மாநில பட்ஜெட்டாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தையொட்டி இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் கூறியதாவது; ஒன்றிய நிதிஅமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பீகார் மாநில பட்ஜெட்டாக உள்ளது. பீகாரில் தேர்தல் வருவதால் அரசியல் ஆதாயத்துக்காக அம்மாநிலத்துக்கு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகம் பேர் பயணிக்கக் கூடிய ரயில்வே துறை குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. 2 மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களுக்கு பட்ஜெட்டால் பயனில்லை. திருக்குறள் வாசிக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கவில்லை. அண்ணா கூறியதுபோல் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது போலத்தான் உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
The post ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை.. பீகார் பட்ஜெட் போல் உள்ளது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!! appeared first on Dinakaran.