திருநெல்வேலி: திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) ஒருநாள் பெய்த சாதாரண மழையின்போது முக்கிய சாலைகளில் தேங்கிய தண்ணீரை வடியவைக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்தது பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அதிருப்தி அடையவைத்தது.
வானிலை மைய எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதையொட்டி அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் நேற்று ஆய்வு கூட்டத்தை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையமும் ஏற்படுத்தப்பட்டது. எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.