சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து நேற்று அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சாலையில் இருந்த நான்கிற்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளன; இருசக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளன. முதியவர் ஒருவர் பேருந்து மோதியதில் மரணமடைந்துள்ளார். பேருந்து ஓட்டுநருக்கு பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் நெருக்கடியான சூழலில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் பணியை செய்து வருகிறார்கள் என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. எங்கோ ஒரு சம்பவம் இதுபோல அரிதாக நடந்தால் வழக்கமானதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும்போதே சரிந்து விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அடிக்கடி நடந்து வருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.