சென்னை: கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் உடல்நலனை பேணும் வகையில், அவர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்று, தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழகக் கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (மார்ச் 18) நடைபெற்றது. பொதுச் செயலாளர்கள் எஸ்.ஜெகதீசன், ஜெகமுருகன், வி.சுப்பராயலு, மாநிலப் பொருளாளர் ஆர்.சேகர் ஆகியோர் முன்னிலையிலும், தலைவர் பொன்குமார் தலைமையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுவசதி திட்டம் குறித்தும், மானியம் மற்றும் குறைந்த வட்டியில் தொழில் தொடங்க கலைஞர் கைவினைக் கடன் திட்டம் குறித்தும், மாநில பொதுக்குழு நடத்துதல் குறித்தும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.