கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் நேற்று மாலை ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதயமாகும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதற்கு காரணம் சித்ரா பவுர்ணமி நாளில் மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் காட்சி ஒரே நேரத்தில் நிகழும்.
இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரி மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலைப்பகுதியிலும் மட்டுமே காண முடியும். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாது என்பதால் கன்னியாகுமரி கடலில் இந்த அபூர்வ காட்சியை காண சித்ரா பவுர்ணமி நாளில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அதன்படி இந்தாண்டு சித்ரா பவுர்ணமி நாளான நேற்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள் மறைந்தது. அப்போது கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடல் பகுதியில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் எழுந்தது. சந்திரனின் ஒளியால் வானம் பளிச்சென்று மின்னியது. இந்த அரிய காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை, சன்செட் பாயின்ட் கடற்கரை மற்றும் பழத்தோட்டம் பகுதியில் உள்ள முருகன் குன்றத்தில் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.
The post கன்னியாகுமரி கடலில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி: சுற்றுலா பயணிகள் ரசித்தனர் appeared first on Dinakaran.