கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் தோல் அல்லாத காலணி உற்பத்தி தி்ட்டங்களை நிறுவ, எவர்வான் கோத்தாரி புட்வேர் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், ரூ.5,000 கோடி முதலீடு மற்றும் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவ, தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.