சென்னை: தமிழக அரசு புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களின் விற்பனை மற்றும் நுகர்வை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிறப்பு அமலாக்க நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ளது. குட்கா, பான் மசாலா, கூல் லிப் மற்றும் பிற மெல்லக்கூடிய புகையிலை வடிவங்கள் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை கல்வி நிறுவனங்களின் 300 அடி சுற்றளவுக்கும் விற்பனை செய்ய கூடாது.
புகையிலை கட்டுப்பாட்டில் (மே 2025 வரை) சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தை (சிஓடிபிஏ-COTPA ACT) கடுமையாக அமல்படுத்தியதில், மொத்தம் 4,60,486 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.7,97,13,387 அபராதம் வசூலிக்கப்பட்டது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 51,477 பள்ளிகளில் மொத்தம் 45,865 பள்ளிகளும் 2,484 கல்லூரிகளில் 2,173 கல்லூரிகளும் புகையிலை இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஓடிபிஏ சட்டத்தின் அடிப்படையில் மஞ்சள் கோடு பிரசாரம் மூலம் அனைத்து கல்வி நிறுவனங்களில் இருந்து 300 அடிக்கு புகையிலை இல்லாத மண்டலங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் புகையிலையை ஒழிக்க ஒவ்வொரு குடிமகனையும், குறிப்பாக பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் இளைஞர் பொது சுகாதாரத்துறையுடன் இணைய வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளது.
The post கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலை இல்லாத மண்டலங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.