சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று கூறி பயணிகள் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோதே, நுழைவாயிலில் தண்ணீர் தேங்கும் பிரச்சினை, மாநகர பேருந்து நிலையத்துக்கும் புறநகர் பேருந்து நிறுத்தத்துக்கும் இடையே எளிதாக கடந்து செல்லும் வகையில் இணைப்பு இல்லாதது, அடிப்படை வசதிகள் இல்லாதது என பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. அவை ஒவ்வொன்றாக அரசால் சரி செய்யப்பட்டன.
புதிய பேருந்து முனையம் தொடங்கும்போது ஆங்காங்கே ஒரு சில குறைகள் இருக்கும். அவை போகப் போக சரி செய்யப்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பேருந்து முனையம் செயல்பட ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் புகார்கள் வந்தவண்ணம் இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.