சேலம்: சேலம் அருகே குப்பை கொட்டிய தகராறில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் மகள் அனிதா (36). இவர் நேற்று காலை வீட்டின் முன்பு குப்பை கொட்டியதால், அருகில் வசிக்கும் ரவிச்சந்திரன் மகன் பூபதி (32) என்பவருக்கும் அனிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பினர் மோதலாக மாறியது.
அப்போது பூபதிக்கு ஆதரவாக உறவினரான டிரைவர் பாலமுருகன் (40), லாரியை ஓட்டி வந்து, வீட்டின் முன்பாக நின்றிருந்த அனிதா மற்றும் அவர்களது உறவினர்கள் மீது ஏற்றி கொல்ல முயன்றார். இதை பார்த்து சுதாரித்து கொண்ட அவர்கள் சிதறி ஓடினர். இதில் அனிதா வீட்டின் முன்பு நின்ற கார் மீது லாரி மோதி சேதமானது. மேலும் தப்பியோடியபோது, அனிதா மற்றும் பூபதி தரப்பினர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து அனிதா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி, பொருட்கள் சேதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இதனிடையே பாலமுருகனின் மனைவி செல்வியும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post குப்பை கொட்டிய தகராறில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர்: சேலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.