நாகர்கோவில்: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை உயிரினங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி நாகர்கோவிலில் நேற்று தொடங்கியது. குமரி மாவட்ட வனத்துறை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வகை உயிரினங்கள் பற்றி விழிப்புணர்பு ஏற்படுத்தும் வகையிலான சிறப்பு புகைப்பட கண்காட்சி, நாகர்கோவில் வடசேரியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது.
மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியை காண காலை முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குவிந்தனர். இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் எடுக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட வன விலங்குகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து வன பாதுகாப்பு ஓவிய போட்டி நடந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், இந்த முயற்சி மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை மரபை பாதுகாக்கும் பணியின் அங்கமாக அமைந்துள்ளது. அதன் அழகை மேலும் பலருக்கு அறிமுகப்படுத்தவும் உதவும். 500க்கும் மேற்பட்ட வன உயிரினங்களின் புகைப்படங்கள் உள்ளன. இந்த உயிரினங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் தான் உள்ளன. கங்காரு வகை பல்லி என்ற உயிரினம் உள்ளது.
இது மிகவும் அரிய வகை ஆகும். இதே போல் நீலத்தாடை, பஞ் சுருட்டன் போன்ற உயிரினங்களும் இருக்கின்றன. இவை நாட்டின் எல்லா பகுதிகளிலும் வசிக்காது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையில் இவை அதிகமாக இருப்பதை புகைப்படம் பிடித்துள்ளனர் என்றார். இந்த கண்காட்சி வரும் 4ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கண்காட்சியை பார்வையிடலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post குமரி மேற்கு தொடர்ச்சி மலையில் 500க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள்: புகைப்பட கண்காட்சியில் வனத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.