சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே ரூ.110 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட மருத்துவமனை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை 1973ம் ஆண்டு 52 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் கலைஞரால் தொடங்கப்பட்டது. இங்கு 3,000 புறநோயாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். அதன் அருகாமையில் தமிழ்நாடு முதல்வர் 110 கோடி ரூபாய் நிதி வழங்கி கட்டப்பட்டு வருகின்ற மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக எப்போது திறக்கப்படும்.
7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கின்ற பல் மருத்துவமனை எப்போது திறக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் ரூ.1,018 கோடி செலவில் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் ரூ.110 கோடி செலவில் ஒரு பிரமாண்டமான மருத்துவமனை கட்டப்பட்டு, பணிகள் இறுதி நிலையில் இருக்கிறது. மிகவிரைவில் மருத்துவ உபகரணங்களும், மருத்துவப் பணியாளர்களும் அதில் அமைக்கப்பட்டதற்கு பிறகு முதல்வர் வாயிலாக அந்த மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது,’’ என்றார்.
The post குரோம்பேட்டையில் ரூ.110 கோடியில் கட்டப்படும் மாவட்ட மருத்துவமனையை விரைவில் திறக்க ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.