தமிழ் சினிமாவின் இசைச் சூழலை பொறுத்தவரை எல்லா காலத்திலும் நடிகர்களுக்கு இருப்பது போலவே இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருப்பது வழக்கம். எனினும், அப்படியான எந்த வகைமைக்குள்ளும் அகப்படாமல் எல்லா தரப்பு ரசிகர்களாலும் சிலாகிக்கப்படும் இசையை கொடுக்கும் இசையமைப்பாளர்கள் ஒருசிலரே. அப்படி ‘ஹேட்டர்’களின் வன்ம விமர்சனங்களுக்கு ஆளாகாமல் அனைவரும் ரசிக்கும்படியான இசையை தொடர்ந்து கொடுத்து வருபவர்களில் ஜி.வி.பிரகாஷ் முக்கியமானவர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சகோதரி மகனான சிறுவன் ஜி.வி.பிரகாஷை ‘ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடலின் ஆரம்ப வரிகளை பாடவைத்திருப்பார். அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் ஹிட்டடித்ததை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவரது குரலுக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து ‘உழவன்’, ‘பம்பாய்’,’ ‘இந்திரா’ உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற முக்கிய பாடல்களில் ஜி.வி.பிரகாஷின் குரலும் இடம்பிடித்தது.