கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சட்டப்பேரவைக்கு உறுப்பினர்கள் வருகை தந்த நிலையில், பேரவை நிகழ்வுகளுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமியை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு சென்று சந்தித்து 20 நிமிடங்களுக்கு மேலாக பேசினார்.