தயா பொறியியல் கல்லூரிக்காக கோயில் நிலத்தை அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சராக பதவி வகித்த மு.க.அழகிரி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரியை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கினார். இந்தக் கல்லூரிக்காக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.