ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. எப்போதுமே இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது அதன் எதிர்பார்ப்பு என்பது பலமடங்கு அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டமும், அதில் நிகழ்ந்த சில நிகழ்வுகளும் எதிர்பாராத விதத்தில் புதிதாக இருந்தன.
பஹல்காம் தாக்குதலின் தாக்கம் மிக வெளிப்படையாக தெரிந்தது. இரு அணிகளின் வீரர்களும் களத்துக்கு வந்தபோது அவர்கள், பேசிக் கொள்ளவும் இல்லை, வழக்கமான கை குலுக்கலும் இல்லை. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் இறந்தனர். தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்த பின்னர், போர் நிறுத்தம் ஏற்பட்டது.