கல்வி உரிமைச் சட்டப்படி, சமக்ர சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டணம் ரூ.2,151 கோடி நிறுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து, தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே இந்த நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதாடி வருகிறது. இதைக் காரணம் காட்டி இதுவரை சேர்ந்து படித்துவரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, 2025-26 கல்வியாண்டில் இத்திட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை என்பதும் வருத்தத்துக்குரிய விஷயமாகும்.