மதுரை: ‘சாதிப் பெயர்களை நீக்குவது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேநேரத்தில், அதற்காக என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தவில்லை’ என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அரசாணை மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து வழக்கறிஞர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளுக்கான சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு 6.10.2025-ல் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.