ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இதன் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.