சென்னை காவல்துறை ஆணையரக அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், பணி முடிந்து தனது வீட்டுக்கு செல்ல பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றபோது, அவரது நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் காவலருக்கே இந்த நிலைமையா? அப்படியென்றால் சாதாரண பொதுமக்களின் நிலை? என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்தது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், இச்சம்பவம் நகைபறிப்பு மட்டுமல்ல, பாலியல் பலாத்கார முயற்சி என்பதும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் நடந்த விசாரணையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இருட்டான பகுதியில் அவர் தனியாக நடந்து சென்றபோது, அங்கு மறைந்திருந்த நபர் இத்தகைய மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் காவலர் துணிச்சலாக கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்ததால் பொதுமக்கள் ஓடிவந்து குற்றவாளியைப் பிடித்து ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.