டெல்லி: சென்னை கார் பந்தய செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் தர வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை தீவுத் திடலை சுற்றி ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி கூறிய தீர்ப்பில், ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடையில்லை என்றும், நிபந்தனையுடன் அனுமதி வழங்குவதாக தெரிவித்தது. மேலும், கார் பந்தயத்துக்கு செய்யப்பட்ட செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் வழங்க வேண்டும். குறிப்பாக 42 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது; கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளை நடத்துவது என்பது மாநில அரசுக்கு சம்பந்தப்பட்ட விசயமாகும். அதில் நீதிமன்றம் தலையிட்டு எப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியும் ? என கேள்வி எழுப்பினார். மேலும் கார் பந்தயத்துக்கு செய்யப்பட்ட செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
The post சென்னை கார் பந்தய செலவை அரசுக்கு தனியார் நிறுவனம் தர வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம் தீர்ப்பு! appeared first on Dinakaran.