சென்னை: சென்னை பல்கலையில் துறை தலைவர்களை தகுதி, திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமிக்க வகை செய்யும் பல்கலை விதியில் 2023ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்கலை சிண்டிகேட் மற்றும் செனட் ஒப்புதல் அளித்தது. இந்த திருத்ததை எதிர்த்து சென்னை பல்கலைக்கழக கிரிமினாலஜி துறை தலைவர் பேராசிரியர் எம்.ஸ்ரீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்கலை குறிப்பிட்ட துறையில் தகுதி அடிப்படையில் இருக்கக்கூடிய மூத்த பேராசிரியர்கள் அனைவருக்கும் துறை தலைவர் பதவியை வகிக்க சமவாய்ப்பு வழங்க இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட துறையின் மேம்பாட்டுக்கு உதவும். துறை தலைவர் என்பது பொறுப்பு. இது பதவி உயர்வு அல்ல. அதேபோல பேராசிரியருக்கு என்ன பணி நிபந்தனை உள்ளதோ அதே நிபந்தனைதான் துறை தலைவருக்கும் உள்ளது.
அதிக ஊதியம் கிடையாது. இந்த விதிகளின் திருத்தம் செய்தது என்பதில் எந்த விதி மீறலும் இல்லை. திருத்ததிற்கு முந்தைய காலத்தில் பேராசிரியர் ஒருவர் துறை தலைவராக இருந்தால் அவர் பணி ஓய்வு பெறும் வரை துறை தலைவராக இருப்பார். இதனால் மற்ற மூத்த பேராசிரியர்களுக்கு துறை தலைவர்களின் வாய்ப்பு மறுக்கபடுகிறது. அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் இந்த திருத்தத்தில் எந்த விதிமீறலும் இல்லை. எனவே, இதில் தலையிட முடியாது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
The post சென்னை பல்கலை. துறை தலைவர்களை தகுதி அடிப்படையில் சுழற்சி முறையில் நியமிக்கும் விதி திருத்தம் செல்லும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.