ஜிஎஸ்டி வரி விகிதம் 2.0 என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றம் தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டில் விதிக்கப்பட்டு வந்த பல்வேறு மறைமுக வரிகளை எல்லாம் ஒருங்கிணைத்து, கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமைந்து வருகிறது.
மாதந்தோறும் 2 லட்சம் கோடி ரூபாயை நெருக்கி வருமானத்தை ஈட்டித்தரும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு அச்சாணியாக இருந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வந்ததால், பொதுமக்களின் அதிருப்தியும் நீடித்து வந்தது. இதற்கு விடைகாணும் வகையில், புதிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.