சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடர் நடைபெற உள்ளது. சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்படுவது இது முதன்முறையாகும். இந்நிலையில் இந்தத் தொடாருக்கு இந்தியாவில் இருந்து 13 போட்டியாளர்கள் நேரடி தகுதி பெற்றுள்ளனர். தரவரிசையின் அடிப்படையில் இவர்கள் தேர்வாகி உள்ளனர்.
ஏற்கெனவே இரு முறை இந்தியாவில் நடைபெற்ற டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் பங்கேற்ற இந்திய போட்டியாளர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகமாகும். மார்ச் 25-ம் தேதி தொடங்க உள்ள இந்தத் தொடரில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் டொமோகாசு ஹரிமோடோ, 5-வது இடத்தில் உள்ள ஹினா ஹயாடா தலைமையில் வலுவான வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளும் களமிறங்குகின்றனர்.