ஜெனிவா: அமெரிக்க அதிபர் டிரம்ப், இம்மாதம் தொடக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரியை அறிவித்தார். ஒரு நாட்டில் அமெரிக்க பொருட்களுக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறதோ,அதே அளவு வரியை அமெரிக்காவும் அந்த நாட்டின் பொருட்களுக்கு விதிக்கும் என்று தெரிவித்தார். ஆனால், திடீரென, வரியை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.அதே நேரத்தில், சீனாவுக்கான இறக்குமதி வரியை மட்டும் அதிகரிப்பதாகக் கூறினார். சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 245% வரி விதித்தது. பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு 100%க்கும் அதிகமான வரி விதித்தது. இரு நாடுகளும் போட்டி போட்டு வரிகளை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் உலக வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,அமெரிக்க அதிபர் டிரம்பின் மாறிவரும் வரிக் கொள்கைகள் மற்றும் சீனாவுடனான மோதல் காரணமாக உலகளவில் பொருட்களின் வர்த்தக அளவு இந்த ஆண்டு 0.2 % குறைய வாய்ப்புள்ளது. வரிகள் இல்லாவிட்டாலும் வட அமெரிக்காவில் வர்த்தகத்தில் சரிவு இருக்கும். இந்த ஆண்டு அங்கு ஏற்றுமதி 12.6 % இறக்குமதி 9.6 % குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் 2025 மற்றும் 2026 ம் ஆண்டுகளில் உலக வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டிரம்பின் வர்த்தகப் போர் பொருளாதார வல்லுநர்களின் கணிப்பை கணிசமாக குறைக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. நிச்சயமற்ற தன்மையினால், பெரும்பாலான நாடுகள் மீதான தனது கடுமையான வரிகளை டிரம்ப் பின்பற்றினால், உலகளவில் பொருட்களின் வர்த்தகம் 1.5% ஆக குறையும். 70க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி தீர்வு காண வாய்ப்புள்ளது. ஆனால் டிரம்ப் தனது கடுமையான பரஸ்பர வரிகளை தொடர்ந்தால் அது மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
The post டிரம்பின் வரி கொள்கைகளால் உலகளவில் வர்த்தகம் சரியும்: உலக வர்த்தக அமைப்பு தகவல் appeared first on Dinakaran.