ஆத்தூரில் இளம் பெண் காணாமல் போகும் புகாரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ (சிபிராஜ்) களத்தில் இறங்குகிறார். அதே நேரத்தில் சென்னையில் இருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணை டார்ச்சர் செய்வதாகப் புகார் வருகிறது. அந்தப் பேருந்தை மடக்கும்போது பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்தப் பயணியைக் கொன்றது யார்? டார்ச்சருக்கு உள்ளான பெண் யார்?, காணாமல் போன பெண் என்ன ஆனார்? இந்த மூன்று சம்பவங்களின் பின்னணியில் இருப்பது யார்? என்பதை 10 மணி நேரத்தில் துப்பு துலக்குவதுதான் படத்தின் கதை.
ஓர் இரவில் நடக்கும் மர்மக் கதைகளைத் தாங்கி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இதுவும் ஓர் இரவில், 10 மணி நேரத்தில் நடக்கும் த்ரில்லர் க்ரைம்தான். விடிந்தால் சபரிமலைக்குச் செல்லும் நிலையில் இருக்கும் நாயகன், ஓர் இரவில் நடக்கும் குற்றங்களைத் துப்பறிகிறார். இளம் பெண் கடத்தப்பட்டதற்கும், பயணியின் கொலைக்கும் உள்ள தொடர்பை சுவாரஸியமாகப் படமாக்க இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் முயற்சி செய்திருக்கிறார்.