
புதுடெல்லி: அல் பலா பல்கலைக்கழக நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான ஜாவெத் அகமது சித்திக்கி, ரூ.7.5 கோடி மோசடி வழக்கில் கடந்த 2001-ல் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் முகமது நபி, அல் பலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் என்பதும், இதே மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்களாக பணியாற்றிய மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளன.

