பாலாற்றில் இந்த ஆண்டு 3 தடுப்பணைகள் கட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்திருந்த நிலையில், தடுப்பணை கட்டுவதாகச் சொல்லி அவருக்கு விசுவாசமானவர்கள் ஆற்றங்கரையிலேயே ரெடிமிக்ஸ் ஆலை அமைத்து மணலைக் கடத்துவதாக காட்பாடி மக்கள் கதறுகிறார்கள்.
அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமவளத் துறை கடந்த மே மாதம் ரகுபதி கைக்கு மாற்றப்பட்டது. இருந்த போதும் மணல் விவகாரங்களில் இன்னமும் துரைமுருகனின் கையே ஓங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தனை நாளும் அவரது செல்வாக்கில் ‘வளம் கொழித்து’ வந்த மணல் புள்ளிகள் இன்னமும் அதிகார தோரணையில் வலம் வருவதாகவும் சொல்கிறார்கள். இதனால், மணல் விவகாரத்தில் இவர்கள் மீது புகார்கள் வந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகச் சொல்பவர்கள், துரைமுருகனின் சொந்தத் தொகுதியான காட்பாடியில் இந்தப் போக்கு உச்சத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.