சென்னை: டெல்லியில் செப்.3-ம் தேதி பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல்கள், வார் ரூம் மோதல்கள் குறித்து விவாதிக்கவும், 234 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜகவில் தற்போது உட்கட்சி பூசல் முற்றி வருவதாக பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாகவும், அண்மையில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட, ”கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம்” என்று நிர்மலா சீதாராமன் மறைமுகமாக சாடியதாகவும் தகவல் வெளியானது. மேலும், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இடையேயான வார் ரூம் பிரச்சினையும் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது.