சென்னை: தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இது வேதனைக்குரியது. அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.