சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயலகத்தில், துணை முதல்வர் மற்றும் மாநில திட்டக்குழுவின் அலுவல் சார் துணைத்தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், 2030-தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி துறையின் எதிர்காலம், அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை ஆகிய நான்கு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.
முதல்வரிடம் சமர்பித்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
1. தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள்: தமிழ்நாட்டின் அதிக வேளாண் சாராத பணிகளை கொண்டுள்ள மாவட்டங்கள் மற்றும் குறைந்த அளவு வேளாண் சாராத பணிகளை கொண்டுள்ள 6 மாவட்டங்களில் உள்ள 12 தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், வேளாண் பணிகளில் இருந்து, அதிகளவில் வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது. கட்டிடம் மற்றும் உற்பத்தி துறைகள் போன்ற வேளாண்மை சாராத துறைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 75%-க்கும் அதிகமான ஆண் தொழிலாளர்கள் மற்றும் 50%-க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் வேளாண்மை அல்லாத துறைகளில் வேலை செய்யும் நிலை உள்ளது.
இது 2012-க்கு பிறகு வேளாண்மை துறையின் சதவீதத்தில், 20% குறைந்துள்ளது. இது ஊரக வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றத்தை காட்டுகிறது. இந்த ஆய்வின்படி, 15 முதல் 34 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்களே இந்த மாற்றத்தின் முக்கிய காரணியாக இருந்து வருகிறார்கள். அதிக ஊதியமும் நிலையான வேலைவாய்ப்புகளும் இளைஞர்களை வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகளுக்கு ஈர்த்துள்ளன. கட்டிட தொழில் இளைஞர்களிடையே முதன்மையான துறையாகவும், பெண்களிடையே உற்பத்தி துறை முக்கிய வேலைவாய்ப்பு துறையாகவும் உருவெடுத்துள்ளது.
2. 2030 நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம்: 2030ம் ஆண்டிற்கான வளர்ச்சி திட்டமான நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் உள்ள 17 இலக்குகள் வாரியாக அத்தியாயங்களை கொண்டுள்ளது. மேலும், இந்த ஆவணம் பல்வேறு இலக்குகளில் மாநிலத்தின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள், சிறப்பு முயற்சிகள் மற்றும் கொள்கை உருவாக்கங்கள் மூலம் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டுகிறது.
3. தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி துறையின் எதிர்காலம்: வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, காலநிலைக்கு ஏற்ப மற்றும் நிலைத்த தன்மையுடன் கூடிய வலுவான அடித்தளத்தை உருவாக்கி உள்ளது. மின்சார வாகனம், கலப்பினம், ஹைட்ரஜன், சிஎன்ஜி மற்றும் டீசல் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். உள்ளூர்மயமாக்கலை ஊக்குவித்தல் மற்றும் அரசின் கொள்கை வடிவமைப்பை வலுப்படுத்த வேண்டும். மின் வாகன உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருப்பதால், 2030ம் ஆண்டுக்குள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு மின் வாகனம் அமைப்புகள், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் திறன்களை மேம்படுத்துவதன் அவசியத்தையும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது. முக்கிய பரிந்துரைகளில், மின்னணு வாகன குழுக்கள் அமைத்தல், ரோல் ஆன் ரோல் ஆஃப் துறைமுகங்கள் மற்றும் பன்முக போக்குவரத்து மையங்களை மேம்படுத்தல், திறன் பூங்காக்கள் வழியாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரிவுப்படுத்துதல் ஆகியவை ஆய்வு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
4. தமிழ்நாட்டை அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி வடிவமைக்கும் பாதை: 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரமாக மாற்றும் தொலைநோக்கு திட்டத்தை முன்வைக்கிறது. உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் உற்பத்தி துறையின் எதிர்காலம் ஆகிய இரு துறைகளிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதை இவ்வறிக்கையில் தெளிவாக விளக்கப்படுகிறது. தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் நிலைத்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உற்பத்தி துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்க பரிந்துரைக்கிறது.
குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையை வலுப்படுத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. அனைவருக்கும் பயனளிக்கும் ஒருங்கிணைந்த மற்றும் செம்மையான வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி, சமூகநீதி மற்றும் அறிவுசார் பரிணாமத்தை ஒருங்கிணைக்கும் விரிவான செயல்திட்டமாக அமைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநில திட்டக்குழுவின் செயல் துணைத்தலைவர் ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் சுதா ஆகியோர் உடனிருந்தனர்.
The post தமிழகத்தில் 2030ம் ஆண்டுக்குள் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு மின் வாகன கட்டமைப்பு திறன்களை மேம்படுத்த வேண்டும்: முதல்வரிடம் மாநில திட்டக்குழு அறிக்கை வழங்கியது appeared first on Dinakaran.