சென்னை: “தமிழகத்தின் மீது மும்மொழி திட்டத்தின்படி இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்யுமேயானால், ஏற்கெனவே படுகுழியில் வீழ்ந்துவிட்ட பாஜக, அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டு அதனுடைய எதிர்காலமே சூனியமாகி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி உறுப்பு 353-ல், இந்தியாவில் ஆட்சி மொழிகளாக இந்தியும், ஆங்கிலமும் தொடர்ந்து இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு பிறகு, இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் பேரில், அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தமிழகம் வரும் போது, கருப்புக் கொடி காட்டப்படும் என்று திமுக அறிவித்தது.