சென்னை: தமிழின் தொன்மையையும், பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் செம்பணி, தமிழ் உள்ளவரை நன்றியோடு போற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் 171-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும், பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் இன்று. மண்ணிலும், தீயிலும் மறைந்துபோக இருந்த தமிழர் வரலாற்று சுவடிகளை பதிப்பித்த அவரது செம்பணி தமிழ் உள்ள வரை நன்றியோடு போற்றப்படும்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.