சென்னை: தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியின் கீழ் விளையாட்டு வீரர், வீராங்கனை இரண்டு பேருக்கு ரூ.5.50 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ‘Champions of Future’ அகாடமியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பைக் பந்தய வீரர் ரெஹான்கான் ரஷீத்க்கு தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் மூலம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதனைகளை படைத்து வரும் தடகள வீராங்கனை பி.எம்.தபிதா பயிற்சிக்கு தேவையான சாதனங்களை வாங்குவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் மூலம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் செக் குடியரசின் தலைநகரான பிராக்கில் பிப்ரவரி 26 முதல் மார்ச் 7ம் தேதி வரை நடைபெற்ற 7 வது பிராக் செஸ் திருவிழா- 2025ன் மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் தனது பெற்றோருடன் துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வரும் கராத்தே பயிற்சி பெற்ற மாணவி ஜான்சி ராணி லட்சுமி பாய் நுஞ்சாகு உபகரணத்தினை சுழற்றுவதன் மூலம் 1 நிமிடத்தில் 159 முறை ‘Nunchaku Back Handrolls’ செய்து ‘கின்னஸ் உலக சாதனை’ படைத்ததையொட்டி தமிழ்நாடு துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதுல்ய மிஸ்ரா, மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் பெற்றோர், பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
The post தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியின் கீழ் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கு ரூ.5.50 லட்சத்துக்கான காசோலை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.