மதுரை: “தமிழகத்தில் 2026-ல் ஆட்சிக்கு வருவதற்கு, திமுக பகல் கனவு காண்கிறது. ஜெயலலிதா மீது அன்பு வைத்த மக்கள் அனைவரும் தற்போதும் அவரை அம்மா என்று அழைக்கின்றனர். ஆனால், திமுகவினர் ‘அப்பா’ வேஷம் போடத் தொடங்கியுள்ளனர்” என்று உசிலம்பட்டியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் சசிகலா பேசினார். மேலும், “தமிழகத்தில் 2026-தேர்தலில் மகத்தான வெற்றியை நாம் பெறுவோம். இதற்கு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். வென்று காட்டுவோம்” என்றார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக சசிகலா நேற்று சென்னையில் இருந்து மதுரை வந்தார். மதுரை- அழகர் கோயில் ரோட்டிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர், இன்று மாலை உசிலம்பட்டிக்கு சென்றார். வழியில் சொக்கானூரணி, கருமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். விழாவில் பங்கேற்ற அவர், மேடையில் வைத்திருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.