சென்னை: “திராவிட இயக்கம் தான் நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால், நாம் இன்னும் முகவரி இல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பற்ற மனிதர்களாக தான் இருந்திருப்போம். திராவிட இயக்கம் வந்த பிறகு தான், கல்வி, வேலைவாய்ப்பில் தமிழகம் ஒரு தன்னிறைவு நிலையை அடைந்திருக்கிறது என்று சொல்லலாம்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை செனாய் நகர் விங்ஸ் கன்வென்ஷென் சென்டரில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2,500 பயனாளிகளுக்கு இன்று (பிப்.20) வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “இன்றைக்கு சில பேர் திராவிட மாடல் என்றால் என்ன? திராவிட மாடல் அரசு என்றால் என்ன? என்று கேட்கின்றார்கள். “இன்னாருக்கு மட்டும் தான் இது” என்பதற்கு எதிராக, எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வது தான் உண்மையான திராவிட மாடல் அரசு. இந்த இலக்கை நோக்கி தான் நம்முடைய முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.