தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ வியூகத்தை சற்றே விரிவாக்கி, ‘கூட்டணியில் யார் யார்’ என்ற அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது திமுக. முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா சந்திப்பு நிகழ்வுகள், அந்த ஆட்டத்தின் அதிரடி காட்சிகள். ‘ஓபிஎஸ் தரப்புக்கு 5 சீட்கள் ஒதுக்க திமுக சம்மதம்… நிதியமைச்சர் பொறுப்பை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்’ என்றெல்லாம் அதற்குள்ளாக செய்திகள் தெறிக்கின்றன.
அதிமுக-வில் தனக்கான உரிமையை நிலைநாட்ட முடியாமல் தொடர் பின்னடைவைச் சந்தித்து களைத்துப் போன ஓபிஎஸ் கடைசியில், “எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக-வில் இணையத் தயார்” என ஒட்டுமொத்தமாக சரணாகதி அடைய வேண்டுகோள் விடுத்தார். ஆனால், தனது முடிவில் உறுதியாய் இருக்கும் இபிஎஸ், “காலம் கடந்து விட்டது” என்று கதவடைத்து, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அமித் ஷாவின் தமிழக வருகையின் போது, அவரைச் சந்திக்க ஓபிஎஸ் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அடுத்தாற்போல், பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ் போட்ட உருக்கமான ‘பெட்டிஷன்’ மறுக்கப்பட்டதுடன் அந்த கடிதத்தின் வரிகளும் வெளியானதால் வேதனையின் உச்சத்திற்கே போனார் ஓபிஎஸ்.