திருப்புவனம்: திருப்புவனம் அருகே, அரசு பஸ்சும், டீசல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மதுரையில் இருந்து சிவகங்கைக்கு டீசல் லோடு ஏற்றிய லாரியும், இளையான்குடிக்கு காஸ் லாடு ஏற்றிய லாரியும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செம்பூர் காலனி என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற காஸ் டேங்கர் லாரியை, டீசல் டேங்கர் லாரி முந்த முயன்றது.
அப்போது டீசல் டேங்கர் லாரியும், எதிரே சிவகங்கையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி டிரைவரான திண்டுக்கல் மாவட்டம் தொட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த நந்தகுமார் (25) மற்றும் அரசு பஸ்சில் பயணம் செய்த 20 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த பூவந்தி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான லாரியில் டீசல் டேங்க் வெடித்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post திருப்புவனம் அருகே அரசு பஸ் – டீசல் டேங்கர் லாரி மோதி 21 பேர் படுகாயம் appeared first on Dinakaran.