சென்னை மாநகராட்சியில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் ரிப்பன் மாளிகை முன்பாக 13 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அவர்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் தொழிலாளர்கள் தாங்கள் சார்ந்துள்ள துறையில் பணி நிரந்தரம் கேட்பது வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில் தூய்மைப் பணியாளர்களும் தங்களுக்கு பணி நிரந்தரம் கோருகின்றனர். அதன்மூலம், தனியார் துறையின் கட்டுப்பாட்டுக்கு செல்வதில் இருந்து பாதுகாக்கப்படுவோம், கூடுதல் சம்பளம் கிடைப்பதன் மூலம் வாழ்க்கைத் தரம் உயரும் என்று அவர்கள் நினைப்பதில் தவறில்லை. அவர்களது போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பதையும் குறை சொல்ல முடியாது.