தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்றபட்டதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் மயக்கமடைந்தனர். தூத்துக்குடியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 1979ல் அனல்மின் நிலையம் முதல் யூனிட் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1980, 1982, 1990, 1992ல் கூடுதலாக 4 யூனிட்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் தலா 210 மெகாவாட் வீதம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் முதல் மற்றும் இரண்டாம் யூனிட் அனல்மின் நிலையத்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது.
மின் உற்பத்தியாகும் லைனில் தீப்பிடித்து எரிந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். சிறிது நேரத்தில் தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 3வது அலகுக்கும் தீ பரவும் சூழல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மற்ற அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தீ விபத்து குறித்த தகவலை தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட், ஸ்பிக் தொழிற்சாலை, என்.டி.பி.எல்., தூத்துக்குடி புறநகர் பகுதிகள் மற்றும் ஏரல் உட்பட 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீ வேகமாக பரவியதால் உடனடியாக அணைக்க முடியவில்லை. சுமார் 15 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தொடர்ந்து புகை மூட்டம் காரணமாக தீப்பற்றியது. இதன் காரணமாக 1 மற்றும் 2-வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்றும் பகல் முழுவதும் 2வது நாளாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கேபிள் வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனல் மின் நிலையத்தில் உள்ள 3, 4, 5 ஆகிய 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மீட்புப் பணியின் போது அனல் மின் நிலைய பகுதியில் கரும்புகை மூட்டம் காரணமாக 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
* கலெக்டர் நேரில் ஆய்வு
அனல் மின்நிலையத்தில் தீவிபத்து நடந்த பகுதியில் கலெக்டர் இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘தீ அணைக்கப்பட்ட பிறகும் புகை வந்து கொண்டிருப்பதால் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களை உடைத்து புதிதாக வழி ஏற்படுத்திக் கொடுத்து தீயினுடைய தாக்கம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அந்த இடங்களில் தீயை அணைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். எந்த ஒரு உயிர் பலியும் இல்லை. யூனிட் 1 மற்றும் 2 முழுமையாக மூடப்பட்டுள்ளது. யூனிட் 3 மற்றும் 4 பாதுகாப்பாக உள்ளது. அங்கு மின் உற்பத்தி நடக்கிறது. யூனிட் 1 மற்றும் 2ல் பற்றிய தீயை அணைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது’ என்றார்.
The post தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து: 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கம்; 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.