ஆந்திரத்தைச் சேர்ந்த 9 வயதுப் பழங்குடிச் சிறுவன், அவனது பெற்றோர் வாங்கிய ரூ.15,000 முன்பணத்துக்காக வாத்து மேய்க்கக் கொத்தடிமைத் தொழிலாளியாக வேலைசெய்ய அழைத்துச்செல்லப்பட்டு, அங்கே சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2030க்குள் இந்தியாவில் கொத்தடிமை முறையை ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், கொத்தடிமை முறையைத் தடுப்பதிலும், அத்தொழிலாளர்களை மீட்பதிலும் நிலவும் சுணக்கம் காரணமாக இலக்கை எட்ட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
கொத்தடிமை முறை: ஒருவர் கொடுத்த கடனுக்காகக் கடன் வாங்கியவரையோ, அவரின் குடும்ப உறுப்பினர்களையோ, அவரைச் சார்ந்திருப்போரையோ பணியாளர்களாக, குறிப்பிட்ட காலத்துக்கு அல்லது கால வரையறை இல்லாமல்; குறைந்த ஊதியத்துக்கு அல்லது ஊதியமே அளிக்காமல் வேலையில் அமர்த்தி அடிமைகள்போல் நடத்துவது கொத்தடிமை முறை எனப்படுகிறது. நவீனக் கால அடிமை முறையாகக் கருதப்படும் கொத்தடிமை முறையில் பெரும்பாலான தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினரைக்கூடத் தொடர்புகொள்ள முடியாத சூழல் உள்ளது.