‘தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் – 2030’ எனும் 5 ஆண்டு திட்டம் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும். சென்னையில் முன்னணி தொழில், கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ரூ.100 கோடியில் செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு, பரிசோதனை மையம் உருவாக்கப்படும். பொறியியல், வார்ப்பக தொழிலில் சிறந்து விளங்கும் கோவை மண்டலத்தில் கோவை சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான இயந்திர தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும். இவற்றை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தைவான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும். ஓசூரில் 5 லட்சம் சதுரஅடி பரப்பில் உயர்தர அலுவலக வசதிகளை கொண்டு ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா, விருதுநகரில் புதிய மினி டைடல் பூங்கா உருவாக்கப்படும்.
ஓசூரை ஒட்டி உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஓசூர் அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்படும். கடலூர், மதுரை மாவட்டம் மேலூரில் காலணி தொழி்ல் பூங்காக்கள் ரூ.250 கோடியில் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சியில் சிப்காட் நிறுவனம் மூலம் காலணி திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும். திருச்சியில் 250 ஏக்கர் பரப்பில் பொறியியல், வார்ப்பக தொழில் பூங்கா அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்கை இழை, தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்படும். கடலூரில் 500 ஏக்கரிலும், புதுக்கோட்டையில் 200 ஏக்கரிலும் புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். இந்த பட்ஜெட்டில் தொழில் துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.